Tuesday, December 25, 2018

ஆரா

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனைச் சுற்றி அறிவாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்மையில் வன்னியரசு வைகோவைப் பற்றி ஆற்றிய எதிர்வினையை  ஓர் உந்தப்பட்ட மனநிலையின் நியாயமான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.
இன்று தமிழ்த் திசை இந்து நாளிதழில், கீழ வெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு என்ற கட்டுரையை எழுதியிருக்கும் அறிவாளர் ரவிக்குமார், ஓரிடத்தில் கூட இடதுசாரிகளின்  போராட்டத்தால், ஒருங்கிணைப்பால்,  ஏற்பட்ட விவசாய சங்கங்களின் ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதை ஒட்டி எழுந்த சர்ச்சைக்கு இன்று ஊடகங்களில் திருமாவளவன் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். ‘வெண்மணி விவகாரத்தில் இடதுசாரிகளின் தியாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது. அதை நன்றி உணர்வோடு கூற விடுதலைச் சிறுத்தைகள் கடமைப்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார் திருமாவளவன்.
வெண்மணியை வர்க்கப் போரின் அடையாளமாகவே நிலை நிறுத்தியது கம்யூனிஸ்டு கட்சி. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வெண்மணிக்குள் விடுதலைச் சிறுத்தைகள்  அஞ்சலி செலுத்துகிறேன் என்று நுழைந்து இதை தலித் படுகொலை என்று கூறினர். அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும், சிறுத்தைகளுக்கும் ஓர் கருத்து வேறுபாடு தோன்றியது. அது அங்கே களத்திலும் காணப்பட்டது.
வெண்மணிப் படுகொலைகள் நடந்ததற்கு முக்கியக் காரணம் என்று தன் கட்டுரையில் பட்டியலிடும் ரவிக்குமார் 1. கூலி உயர்வுக் கோரிக்கை, 2. சாதியப் பாகுபாடு, 3. நிலவுடமை என்று கூறுகிறார். அதற்குப் பின்னான இரு பத்திகளில் வெண்மணியில் நடந்தது ஒரு சாதியப் படுகொலை என்கிறார்.
கீழத் தஞ்சை மாவட்டத்தில்  கூலித் தொழிலாளர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் தலித்துகள், அதன் பின் சாதி இந்துக்கள் என்ற நிலையில் இதை ஓர் வர்க்கப் போராக  பார்ப்பதா சாதிக்குள் குறுக்கி தலித் பிரச்னையாக பார்ப்பதா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
சீனிவாச ராவ்  ஆண்டான் -அடிமைத் தனத்தை எதிர்த்தே புரட்சி செய்தார்.  இடதுசாரிகளின் கூலி, உரிமைப் போராட்டத்துக்கு எதிராக   நடத்தப்பட்ட மாகொடிய படுகொலையின் நினைவு நாளில், இடது சாரிகள் என்ற தடமே இல்லாமல் ஓர் வெகுஜன இதழில் கட்டுரை எழுதிவிட்டு... சரித்திரத்தை மாற்றுகிறார்கள் என்று பிறர் மீது நாம் குற்றம் சொல்ல என்ன முகாந்திரம் இருக்கிறது!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...