முற்றிலும் மூடியப் பிறகே
வேலையை தொடங்குகிறது மண்
எதனை நாம் விற்றோமோ -அது
நம்மைப் பற்றத் தொடங்குகிறது
நெருப்பையும் வெறுப்பையும்
கண்ட மண்
ரத்தமும் சதையும் கண்ட மகிழ்ச்சியில்
பூச்சிக்கொல்லிக்கு பயந்த உயிர்கள்
இங்குதான் காத்திருக்கின்றன பசியுடன்
மீளா துயிலில் நான் படுத்துறங்க
எனை மேய தொடங்கின அவைகள்
எரிக்கப்பட்டிருந்தால் எலும்பாவது கிடைத்திருக்குமே
தோண்டி தோண்டி தோல்வியுற்றன
நரிகள்
தானம் செய்யலாம் என நினைத்திருந்த
உறுப்புகள் அனைத்தையும் மண்
உண்டது
விதவிதமாய் உண்ட என்னை
விருந்தாய் அருந்தின உயிர்கள்
மண்ணிற்காக மடிந்தான் என்கிறோம்
உண்மைதான் மண்ணிற்கே தருகிறோம்
பெருமைபடுகிறேன் என் தாய்மண்
என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது
துடிதுடித்தெழுந்தேன் ஒரு கணம்
கனவில் என் புதைந்தப் பிணம் !
- தாகம் செங்குட்டுவன்
( "மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " .....தொகுப்பிலிருந்து )
No comments:
Post a Comment