எனக்கு இந்த சிறுவன்தான் ஹீரோ.
------------------------------------------------------------
பெயர் மோகன்பாபு. சேலம் சீநாய்க்கன்பட்டி. லிட்டில் ஃபிளவர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றான்.
இன்று போடிநாய்க்கனூரில் நடந்த மாநில அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி 27 கிலோ எடை பிரிவில் தன்னைவிட ஒரு அடி உயரமான, ப்ளாக் பெல்ட் பெற்ற சிறுவனோடு மோதினான்.
சும்மா பறந்து பறந்து எகிறி ஸ்பின்னிங் கிக் எல்லாம் பட்டையை கிளப்பினான். மொத்த கூட்டமும் ஆராவாராம் செய்தது. ஆனாலும் சில புள்ளிகளில் தோற்றுப் போனான்.
வெளியே வந்து தனிமையில் நின்றுகொண்டு தாளமாட்டாமல் அழுதான். அப்பா அம்மா யாரும் உடன் வந்திருக்கவில்லை.
ஓடிச்சென்று வாரி அணைத்துக் கொண்டேன். நீதாண்டா ஹீரோ. செமயா விளையாடினே. மொத்த பேரும் உன்னைதாண்டா கொண்டாடினாங்க. உன்னைவிட உயரமான, கூடுதலா ப்ளாக் பெல்ட் வாங்கியவரையே சுத்த விட்டுட்டடா என்றுகூறி ஆறுதல் படுத்தினேன். மேலும் தேம்பினான். இறுக அணைத்துக் கொண்டேன். வெகு நேரம் ஆனது விசும்பல் அடங்க.
பிறகு கடைக்கு அழைத்து சென்று குளிர்பாணம் எல்லாம் வாங்கிக் கொடுத்து ஜாலியாக்கி அழைத்து வந்து எதிர்கொண்ட நண்பர்களிம் எல்லாம் அறிமுகம் செய்தேன். அவர்களும், 'நாங்க பார்த்தோம். செமையா விளையாடினடா தம்பி என்று உண்மையிலேயே தட்டிக்கொடுத்தார்கள். மேலும் சிலர் தேடிவந்து பாராட்டினார்கள். பையன் நார்மலுக்கு வந்தான்.
உண்மையிலேயே இந்த சிறுவனின் ஆட்டம் ஆடுகள அமர்க்களமாகதான் இருந்தது. வரும் காலத்தில் பெரிய ஆளா வருவான்.
சல்யூட்ரா தம்பி...
No comments:
Post a Comment