Friday, July 27, 2018

தோழர் தியாகு

கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்!

நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திமுக தலைவராகக் கலைஞர் 50 ஆண்டு பணியாற்றியது குறித்த விவாதத்தில் கலைஞர் மீதும், திமுக மீதும் தோழர் தியாகு தர்க்க அடிப்படையில் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். அந்த விமர்சனங்களில் தெறித்த சில பொறிகள் -

1. கலைஞர் என்ற ஒரு தனிமனிதரின் ஆளுமை என்பதை விட, அவர் திமுகவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவரைப் புறஞ்சார்ந்த வகையில் மதிப்பீடு செய்வதே பொருத்தமாக இருக்கும்.

2, திமுக எந்த இலக்குக்காக இயங்கத் தொடங்கியதோ அந்த இலக்கை விட்டுத் தவறிச் செல்வதாகத்தான் திமுகவின் அரசியல் பயணம் இருந்திருக்கிறது, இலக்கு தவறிப் பயணம் செய்த அமைப்பின் தலைவராகத்தான் கலைஞர் இருந்திருக்கிறார்.

3. மாநில சுயாட்சிக்கென ராஜமன்னார் குழுவைக் கலைஞர் அமைத்தது உண்மைதான் என்றாலும், அந்தக் குழு கொடுத்திருந்த பரிந்துரைகளில் கலைஞர் காட்டிய முனைப்பு என்ன? காட்டாக, இந்தித் திணிப்பைப் பாதுகாக்கும் பிரிவு 17க்கு எதிராக 1965இல் பெரும் போராட்டம் நடத்திய திமுக, ஆட்சிக் கட்டில் ஏறியதும், தில்லியில் பல அமைச்சரவைகளில் பங்கேற்றும் 17ஆவது பிரிவை அடியோடு நீக்குவதற்குச் செய்த முயற்சிகள் என்ன? அதற்காகக் கலைஞரிடமோ, அவரை விட்டுப் பிரிந்து சென்றவர்களிடமோ இருக்கும் வழிகாட்டுப் பாதை என்ன?

4. பதவி என்பது மேல்துண்டு போல, கொள்கைக்காக அதைத் தூக்கி எறிய வேண்டும் என்றார் அண்ணா. ஆனால் அவர் மறைந்த பிறகு மாநில சுயாட்சிக் கொள்கை, மொழிக் கொள்கை என எதை எடுத்துக் கொண்டாலும் மேல்துண்டுக்காக வேட்டியை இழந்த கதைதான் இதுவரை நடந்துள்ளது.

5. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த போது, ராஜ மன்னார்க் குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் அமைச்சரவையில் திமுக பங்கேற்றதா? தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் திமுக கேட்டதா?

6. இந்தப் பதவிகளை வைத்துக் கொண்டு பெரும் சாதனைகள் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியாது என்பதால்தான், திமுக சின்னஞ்சிறு சாதனைகளைக் கூட மிகவும் பெரிதாக்கிக் காட்டுகிறது.

7. நெருக்கடிநிலைக் காலத்தில் அண்ணா சாலையில் தனி மனிதராகக் கலைஞர் துண்டறிக்கை கொடுத்தது துணிச்சலான செயல்தான். ஆனால் தமிழ்நாட்டில் மிசா சட்டத்தை முதலில் பயன்படுத்தியது கலைஞர்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.

8. தடா சட்டம் நீங்கிய போது, அதற்கு மாற்றாத இந்தியாவுக்கே வழிகாட்டியாக பொடோ கொண்டு வந்ததும் கலைஞர்தான்.

9. கலைஞர் நினைத்திருந்தால் அடக்குமுறைக் கருவியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். காட்டாக, அவர் ஆட்சியில் ஏழாண்டுச் சிறைவாசம் முடித்தோர் விடுதலை செய்த போது, 17 ஆண்டு சிறையில் வாடும் இசுலாமியரையும் விடுதலை செய்யுங்கள் எனக் கலைஞருக்கு நான் கடிதம் எழுதியும், அவர் அதனைக் கேட்கவில்லை. இதற்குக் காரணம் அவர் தில்லியைக் கண்டு அஞ்சியது, தில்லி நம் மீது வருத்தப்படக் கூடாது என்பதே ஆகும்.

10. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கலைஞர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை போர்ட் டிரஸ்டில் சுபோத் கான்ட் சகாய் என்ற இந்திய அமைச்சர்  தங்கியிருந்த போது, அவரைச் சந்தித்து, நாங்கள் தமிழ்த் தேசியர்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கோம் பாருங்கள் எனப் பட்டியல் வாசித்தார் கலைஞர்.

11. நெருக்கடி நிலையால் ஆட்சியை இழந்த கட்சிதான் திமுக. அதற்குப் பிறகு சமாதானத் தூது அனுப்பியதும் திமுகதான். நெருக்கடி நிலையின் கடைசிப் பகுதியில் அரசமைப்புக்கு அப்பாற்பட்ட அதிகாரகமாக சஞ்சய் காந்தி செயல்பட்டு, அவர் ஓர் ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்த போது, கலைஞர் முரசொலியில் சஞ்சாய் காந்தியைப் புகழ்ந்தும், கம்யூனிஸ்டுகள் தேசத் துரோகிகள் என்று சாடியும் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

12. நெருக்கடி நிலையை எதிர்த்த கலைஞர்தான் 1980இல் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார். எனவே கலைஞரின் ராஜதந்திரம் என்று சொல்லப்படுவது எல்லாமே, கூட்டல் கழித்தல், சந்தர்ப்பவாதம் என்பதற்கு மேல் வேறெதுவுமே கிடையாது. கலைஞரே இதனை மறுக்க மாட்டார்.

13. உங்களின் லட்சியப் பயணத்தைப் பதவி அரசியாலால் தொலைத்து விட்டீர்கள் என்றுதான் நான் கலைஞரைப் பார்த்துச் சொல்வேன்.

# நலங்கிள்ளி

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...