Monday, July 16, 2018

பாமரன்

வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட.... அப்படியே  தலைகீழாக  மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்தன என்று வேண்டுமானால் சொல்லலாம்.
.
பள்ளி கல்லூரிப்  பருவங்களில்  புஷ்பா தங்கதுரை...  ராஜேஷ்குமார்... சுஜாதா... பாலகுமாரன் போன்றோரின் கதை படித்து வளர்ந்த ஜாதிதான் என்றாலும்  அதில்  கொஞ்சம்  U TURN  போட  வைத்தவர் ஜெயகாந்தன் என்றும் சொல்லலாம்.
.
ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் அறிமுகமான ஈழத்து இலக்கியம் ரத்தமும் சதையுமான  மனிதர்களை  கண்முன்னே  கொண்டு  வந்து  நிறுத்தியது.
.
செ.யோகநாதன், கணேசலிங்கன், அருளர் என எண்ணற்றோரது படைப்புகள் என்னை மேலும் செப்பனிடச் செய்தன. அதே கால கட்டத்தில் அறிமுகமானதுதான்  இடதுசாரி  இலக்கியமும்.
.
கையில் நூறு ரூபாயோடு என்.சி.பி.எச் போனால் ஒரு லாரி நிறைய புத்தகங்களை வாங்கி வரலாம் அன்றைக்கு.
.
அப்படி வாசிக்கத் தொடங்கியதுதான்  நிரஞ்சனாவின் “ நினைவுகள் அழிவதில்லை”, ராகுல்ஜியின் “பொதுவுடைமை என்றால் என்ன”?, ஜூலியஸ் பூசிக்கின் “தூக்குமேடை குறிப்பு”  போன்றவை.
.
ஆனால்  இவற்றிலெல்லாம் தலையாயதும் எனது தனிப்பட்ட குணநலன்களை ஓரளவுக்கு வடிவமைத்ததும்  ஆன  புத்தகம் என்று சொன்னால்  அது  மார்க்சிம்  கார்க்கி  எழுதிய   "தாய்"   நாவல்தான்.
.
மனிதர்களைச் சக்கையாகப் பிழிந்து வெளியில் தள்ளும் அந்தத் தொழிற்சாலை....
.
அந்த ஆலையின் அடித்தளமே தாங்கள்தான் என்பதை உணராது  குடியும்  சச்சரவுமாய்க் கழியும்  தொழிலாளர்களின் குடியிருப்புகள்...
.
மனைவிகளையும் தாய்களையும்  அடித்து உதைத்து துவம்சம்  செய்யும்  கணவன்கள்...  பிள்ளைகள்.... 
.
இவற்றுக்கு  நடுவே தகாத ஒரு  வார்த்தை கூட பேசாது மென்மையாக நடந்து கொள்ளும் மகன் பாவெல்.... 
.
அவனது  கண்ணியமிகு நண்பர்கள்....
.
அவர்கள் கூடிக்கூடி வாசிக்கும் நல்ல நல்ல நூல்கள்...
.
இதுதான் அந்தத் தாயை ஆச்சர்யம் கொள்ளவும் வைக்கிறது  சில  வேளைகளில்  அச்சம்  கொள்ளவும் வைக்கிறது.
.
இந்நாவலை  வாசித்த  காலகட்டங்களில்    அந்தப்  பாவெல்லாகவே நாமும் மாற மாட்டோமா  என்கிற  ஏக்கமும்  நம்முள்ளே  எழும்.
.
அதைவிடவும்  இத்தகைய இடதுசாரி இலக்கியங்களை வாசிக்கும்போது வரும் ஒரு  Side Effect ஒன்றும் உண்டு. அதுதான்  இத்தகைய  நூல்களையும் வாசித்துவிட்டு இங்குள்ள  மரபான  "கம்யூனிஸ்டுகளை"க்  கண்டு குழம்பிப் போவது.
.
ஆனால் ஆரம்பத்திலேயே எனக்கு அந்தச் சிக்கல் எழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
.
கம்யூனிசம்  என்கிற  அந்த  உன்னத  தத்துவம்  வேறு....
உள்ளூர்  எதார்த்தம்  வேறு  என்கிற  புரிதல்தான்  அது.
.
மார்க்சிம் கார்க்கி போன்றோறது இத்தகைய படைப்புகள்தான் வர்க்க உணர்வோடு இம்மண்ணையும் இம்மக்களையும்  பார்க்கக்  கற்றுக் கொடுத்தது.
.
அதுதான் :
கம்யூனிச மனநிலையில் வாழ்வதென்பது வேறு....
கட்சி  மெம்பராக  வாழ்தல் வேறு  என்கிற  உண்மையையும்  சொல்லித் தந்தது.
.
ஆக... பாவெல்லின் தாயே என்னுள் இன்றும் தாயாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...