வாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட.... அப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல் என்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்தன என்று வேண்டுமானால் சொல்லலாம்.
.
பள்ளி கல்லூரிப் பருவங்களில் புஷ்பா தங்கதுரை... ராஜேஷ்குமார்... சுஜாதா... பாலகுமாரன் போன்றோரின் கதை படித்து வளர்ந்த ஜாதிதான் என்றாலும் அதில் கொஞ்சம் U TURN போட வைத்தவர் ஜெயகாந்தன் என்றும் சொல்லலாம்.
.
ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் அறிமுகமான ஈழத்து இலக்கியம் ரத்தமும் சதையுமான மனிதர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
.
செ.யோகநாதன், கணேசலிங்கன், அருளர் என எண்ணற்றோரது படைப்புகள் என்னை மேலும் செப்பனிடச் செய்தன. அதே கால கட்டத்தில் அறிமுகமானதுதான் இடதுசாரி இலக்கியமும்.
.
கையில் நூறு ரூபாயோடு என்.சி.பி.எச் போனால் ஒரு லாரி நிறைய புத்தகங்களை வாங்கி வரலாம் அன்றைக்கு.
.
அப்படி வாசிக்கத் தொடங்கியதுதான் நிரஞ்சனாவின் “ நினைவுகள் அழிவதில்லை”, ராகுல்ஜியின் “பொதுவுடைமை என்றால் என்ன”?, ஜூலியஸ் பூசிக்கின் “தூக்குமேடை குறிப்பு” போன்றவை.
.
ஆனால் இவற்றிலெல்லாம் தலையாயதும் எனது தனிப்பட்ட குணநலன்களை ஓரளவுக்கு வடிவமைத்ததும் ஆன புத்தகம் என்று சொன்னால் அது மார்க்சிம் கார்க்கி எழுதிய "தாய்" நாவல்தான்.
.
மனிதர்களைச் சக்கையாகப் பிழிந்து வெளியில் தள்ளும் அந்தத் தொழிற்சாலை....
.
அந்த ஆலையின் அடித்தளமே தாங்கள்தான் என்பதை உணராது குடியும் சச்சரவுமாய்க் கழியும் தொழிலாளர்களின் குடியிருப்புகள்...
.
மனைவிகளையும் தாய்களையும் அடித்து உதைத்து துவம்சம் செய்யும் கணவன்கள்... பிள்ளைகள்....
.
இவற்றுக்கு நடுவே தகாத ஒரு வார்த்தை கூட பேசாது மென்மையாக நடந்து கொள்ளும் மகன் பாவெல்....
.
அவனது கண்ணியமிகு நண்பர்கள்....
.
அவர்கள் கூடிக்கூடி வாசிக்கும் நல்ல நல்ல நூல்கள்...
.
இதுதான் அந்தத் தாயை ஆச்சர்யம் கொள்ளவும் வைக்கிறது சில வேளைகளில் அச்சம் கொள்ளவும் வைக்கிறது.
.
இந்நாவலை வாசித்த காலகட்டங்களில் அந்தப் பாவெல்லாகவே நாமும் மாற மாட்டோமா என்கிற ஏக்கமும் நம்முள்ளே எழும்.
.
அதைவிடவும் இத்தகைய இடதுசாரி இலக்கியங்களை வாசிக்கும்போது வரும் ஒரு Side Effect ஒன்றும் உண்டு. அதுதான் இத்தகைய நூல்களையும் வாசித்துவிட்டு இங்குள்ள மரபான "கம்யூனிஸ்டுகளை"க் கண்டு குழம்பிப் போவது.
.
ஆனால் ஆரம்பத்திலேயே எனக்கு அந்தச் சிக்கல் எழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
.
கம்யூனிசம் என்கிற அந்த உன்னத தத்துவம் வேறு....
உள்ளூர் எதார்த்தம் வேறு என்கிற புரிதல்தான் அது.
.
மார்க்சிம் கார்க்கி போன்றோறது இத்தகைய படைப்புகள்தான் வர்க்க உணர்வோடு இம்மண்ணையும் இம்மக்களையும் பார்க்கக் கற்றுக் கொடுத்தது.
.
அதுதான் :
கம்யூனிச மனநிலையில் வாழ்வதென்பது வேறு....
கட்சி மெம்பராக வாழ்தல் வேறு என்கிற உண்மையையும் சொல்லித் தந்தது.
.
ஆக... பாவெல்லின் தாயே என்னுள் இன்றும் தாயாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
Monday, July 16, 2018
பாமரன்
Subscribe to:
Post Comments (Atom)
கார்டூனிஸ்ட் பாலா
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...

-
தம்பி பிறந்து நான்கைந்து மாதங்களில், சிவகங்கை அரண்மனைக்கு எதிரான அரங்கில் கலைஞர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார், அப்பாவும், அம்மாவும் ...
-
தயவுசெய்து தற்கொலை செய்துகொள் நாங்கள் சமையலராக இருக்கிறோம் நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்... நாங்கள் மருத்துவராக இருக்கிறோம் ...
-
படத்தைப் பாருங்கள். மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்...
No comments:
Post a Comment