Thursday, November 29, 2018

தாகம் செங்குட்டுவன்

இடதுக்கால்களின்
காலணிகள்
மிக அதிகம்

வலதுக்கால்களின்
காலணிகள்
மிகக்குறைவு

கணக்குப்பார்த்தப்பின்பே
புரிந்துக்கொண்டான்
காலணித் தொழிற்சாலையின்
அதிபர்

தன் தொழிலாளர்கள்
ஏதோ ஓர்
கோரிக்கைக்காக
போராடுகிறார்கள்
என்பதை !

வெள்ளை தேவதைகளே...
உங்கள்
போராட்டத்தை
உடனே
நிறுத்திவிட்டு
பணிக்குத்திரும்பச்சொன்ன
நீதிபதியிடம்
கேளுங்கள்....

எந்தக்கைகளில்
அதிக
ஊசிகளைப்போடுவது
என்று
இடதா ?
வலதா ?

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " தொகுப்பிலிருந்து )

Sunday, November 18, 2018

தாகம் செங்குட்டுவன்

எதுகையும் மோனையும்
எதிரெதிர் திசை என்றானது

இங்கே இலக்கியம் இதயம்
இலக்கணம் இரு விழிகள்

ரகசிய யுத்தங்கள் நோக்கு வர்மத்தில் பல ஆண்டுகள் நிகழ்வதால்
வெட்டவெளி  முத்த நாடகங்கள் இங்கு  அவசியமற்றுப் போகின்றன

சந்திப்புகள் நொடி இழையில் நேர்வதால்
சந்திப்பிழைக்கே வாய்ப்பில்லை

திணிக்க வழியில்லை என்பதால்
போராட்டமும் இல்லை தியாகிகளும் இல்லை

வரிவடிவமே இன்றி
தொன்றுத் தொட்டு வாழ்கிறது ...

பாரெங்கும் வேர்பரப்பி தழைக்கும்
பார்வை மொழி !

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " தொகுப்பிலிருந்து....)

Thursday, November 15, 2018

தாகம் செங்குட்டுவன்

தீராக்
கூடலின்னிடையில்
திடுக்கிட்டுக்
கேட்டான்
ஆணலை ...

" உன்னுதட்டின்
உப்பெங்கே " ?

லயித்தபடி
கிடந்தப்
பெண்ணலை-
சலித்தபடி
சபித்தாள் ...

"சேமிக்கத்
தெரியாத
சோமாரிகள்
நாட்டின்
மழைநீர் "

என்னிதழை
ஓயாமல்
நனைக்கையில்
என் செய்வேன்
கடலா ?

- தாகம் செங்குட்டுவன்

( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? தொகுப்பிலிருந்து )

Saturday, November 10, 2018

மாதவி

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 10000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தக்கொள்ளை நோய்களுக்கு மடிந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் இந்த நோய்கள் கடுமையாகத் தாக்கியபோது 'நிலவேம்பு நன்னீரே' மக்களைக்காத்தது. இறப்பு விகிதத்தைத்தடுத்தது . மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 'நிலவேம்பு நன்னீரை' சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக விநியோகித்தார்.

ஆனால், வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா ஆட்சி' என்று பிதற்றும் இந்த அரசு, முழுக்க முழுக்க அலோபதி மருந்துகளையே தற்போது நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. அவர்களது 'அம்மா' முதல்வராக இருந்தபோது வழங்கப்பட்டு , டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்திய சித்த மருந்தான 'நிலவேம்பு நன்னீரை ' தற்போதைய அரசு முற்றிலும் புறக்கனித்துவிட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், " டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தீர்க்கும் ஒரே மருந்து  'டாமி ஃப்ளூ' . இதன் விலை  480 ரூபாய். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20 லட்சம் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது ' என்கிறார்.

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்த அலோபதியில் மருந்துகளே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. 'டேமி ஃப்ளூ' வெறும் ஏன்டி பையாட்டிக் . இதன் விலை பத்து மாத்திரைகள் ரூபாய் 480. தனியார் மருத்துவர்கள் தற்போது வழங்கும் மாத்திரை 'ஏன்டி ஃப்ளூ ' . இதன் 10 மாத்திரைகள் ரூ 580 ! இது 75 மில்லி கிராம். இரண்டு வயது குழந்தைக்கு காய்ச்சல் என்று மருத்துவரிடம் போனாலும், இதே மாத்திரைதான். மருத்துவர் இதே மாத்திரையை, 30 மில்லிகிராம் என்று எழுதுகிறார். சிப்லா கம்பெனி இந்த மாத்திரையை 75 மல்லி கிராம் என்றே விற்பனைக்கு அனுப்புகிறது. குழந்தைகளுக்கு இந்த ட்யூப் மாத்திரையை எப்படி பாதியாக உடைத்துத் தருவது? என பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

சரி, சுகாதாரத்துறை அமைச்சர்  மற்றும் தனியார் மருத்துவர்கள் தரும் Anti flu மற்றும் Tami flu மருந்துகள் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் வல்லமைக் கொண்ட மருந்துகள் என்றால் , தமிழகம் முழுக்க ஏன் கொத்துக்கொத்தாக மக்கள் மடிகின்றனர் ?

ஏற்கனவே இந்த நோய்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்திய சித்த மருந்தான 'நிலவேம்பு நன்னீரை' அரசு உடனடியாக மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். அரசு சித்த மருத்துவர்களை மற்றும் அரசு ஆங்கில மருத்துவர்களை கவுரவம் பார்க்காமல் சுகாதாரத்துறை இணைக்க வேண்டிய காலமிது.

ஆங்கில மருத்துவமா ? சித்த மருத்துவமா? என்கிறப் போட்டியில், ஒருபுறம் கோடிக்கணக்கில் அரசு வெறும் Anti biotic மருந்துகளை மக்கள் வரிப்பணத்தில் வாங்கி வீணடிக்கிறது. மறுபுறம் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஊடகங்கள் சர்கார் படப்பிரச்சனை , மற்றும் சந்திரபாபு நாயுடு வருகை போன்றக் குப்பை செய்திகளை ஒதுக்கிவிட்டு , 24 மணி நேரமும் இந்த உயிர்கொல்லி நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் தெருக்கள் தோறும் 'நிலவேம்பு நன்னீரை' மக்களுக்கு அரசும் , அரசியல் கட்சிகளும் இலவசமாக வழங்கவேண்டும்.

- தாகம் இதழுக்காக...மாதவி

Friday, November 9, 2018

கவிதா பாரதி

எச்.ராஜாவின் சர்கார்
#
சுந்தர் ராமசாமியின் அப்பா ராமேஸ்வரம் மீனவர்..
அவரோடு சேர்ந்து மொத்தம் பதிமூன்று பேர் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்..

என்னைக் கரைக்குக் கொண்டுபோனால் அடக்கம் செய்ய செலவாகும், அந்தக் காசுல என் புள்ளைங்க பசியாறட்டும்..என்னைக் கடல்லயே போட்ருங்க என்று மரண வாக்காக சொல்லிவிட்டு செத்துப் போகிறார் சு.ரா.வின் தந்தை.. அதேபோல் அவரது உடலை கடலில் வீசிவிடுகிறார்கள்..

எல்லாருக்கும் அஸ்தியைக் கடல்ல கரைப்பாங்க, ஆனா எங்கப்பாவையே கடல்ல கரைச்சிட்டாங்க என்று கண்ணீர் விடுகிறான் சுந்தர் ராமசாமி..

அப்படியாப்பட்ட சோகப்பின்னணி கொண்ட கதாநாயகன் என்ன செய்வான்..?
தன் தந்தையின் சாவுக்குக் காரணமான சிங்கள ராணுவத்துக்கெதிராகக் குரல் கொடுப்பான்..

அது கஷ்டமென்றால் குறைந்தபட்சம் தன் தந்தைபோல் இனி எந்த மீனவனும் சாகக்கூடாதென மீனவ நண்பனாகத் திகழ்வான்..

ஆனால் ஜெயமோகனைத் துணைக்கொண்ட முருகதாஸின் கதாநாயகன் ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியின் தலைமை அதிகாரியாகிறான்.. வருடம் ஆயிரத்து எண்ணூறு கோடி சம்பளம் பெறுகிறான்..
அதில் ஒத்தப்பைசாகூட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு செலவிடவில்லை

மாறாக தனக்கெதிரான கம்பெனிகளை அழித்து இழுத்து மூடுகிறான்..
அப்படி மூடப்பட்ட ஒரு கம்பெனியால் இருபத்தியிரண்டாயிரம் பேர் வேலையிழக்கின்றனர்..

இப்படி பல கம்பெனிகளை மூடி லட்சக் கணக்கானவர்கள் சோற்றில் மண்ணள்ளிப் போட்ட கார்பரேட் கிரிமினல் அவன் ஓட்டை யாரோ போட்டதற்காக வீறுகொண்டு எழுகிறான்..

மீத்தேன். ஹைட்ரோ கார்பன், ஸ்டெரிலைட், காவேரி  எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கிறான்..
ஆனால் பாவம் அந்தக் கூமுட்டைக்கு டெல்லியில் ஒரு அரசாங்கம் இருப்பதே தெரியவில்லை..
எல்லாப்பிரச்னைக்கும் காரணம் முதலமைச்சர் மாசிலாமணிதான் என்றே நம்புகிறான்..

அவரை எதிர்த்து டி.ராஜேந்தரின் உடல் மொழியிலும், சமுத்திரக்கனியின் வாய்மொழியிலும் போராடுகிறான்..

போதும்.. மீதியை வெண்திரையில் காணுங்கள்..

சொல்ல வந்தது இதுதான்..

1. ஏ.ஆர்.முருகதாஸ் தன் கதாநாயகனுக்கு சுந்தர் ராமசாமி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக எச்.ராஜா என்று பெயர் வைத்திருக்கலாம்..
காரணம் ஏறக்குறைய எச்சாரின் அரசியல் பார்வையுடன்தான் தமிழக அரசியலின்மீது குரோதத்தோடு இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது

2. சமகால நிகழ்வுகளை விஜய் டி.வி.யில் லொள்ளு சபா வெகு சுவாரசியமாக கையாண்டிருக்கிறது.

3. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், காவேரி என பல போராட்டங்களில் இளம் இய்க்குநர்களும், உதவி இயக்குநர்களும் களத்துக்கு வந்து போராடியிருக்கிறார்கள்..

ஆனால் அப்போதெல்லாம் இவற்றிற்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசாத முருகதாஸ் இவற்றையெல்லாம் தன்வயப்படுத்த முயன்றிருக்கிறார்..

4. தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு எதிரானதொரு கருத்தியலோடு சன் டி.வி. கை கோர்த்திருப்பது தற்செயலானது என்று கருத முடியாது..

5. தமிழ்த்திரையுலகில் பலமானதொரு பி.ஜே.பி. லாபி உருவாக்கப்படுகிறது..
இனி நம் கதாநாயகன்கள் மறைமுகமாக திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முனகுவார்கள்

6. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
கங்கை அமரன் பி.ஜே.பி வேட்பாளரானது தெரிந்ததே..

அதுபோல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சி தொகுதியின் பி.ஜே.பி. வேட்பாளராவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன..

Thursday, November 8, 2018

தாகம் செங்குட்டுவன்

கடவுள் மறுப்பாளன் எனக்கும்
மனப்பாடம் உன் ஏசப்பா புராணம்

கைகளில் உடைபடும் ரசத்திற்காக...
உன் கண்களில் பேசும்  திராட்சைகள்

பாப் இசைக்கும் கிறித்துவர்கள் மத்தியில்
போப் மொழிபெயர்த்த திருவாசகம் நீ

பைபில் தவழ்ந்ததை விட மிக அதிகம்
உன் கைகளில் சிரித்தன கவிதை நூல்கள்

உற்று உற்று பார்த்து வியந்திருக்கிறேன்
உன் கழுத்தில் தொங்கிய ஏசுவின் சிரிப்பை

மார்கழி மாதக் குளிருக்கு இதம் தரும்
உன் வீட்டில் ஜொலிக்கும் நட்சத்திரம்

தேவாலயங்களைப் பார்க்கும் போதெல்லாம்
உயிர்தெழுகின்றன உன் நினைவுகள்

ஆமென் ஓசைகள் கேட்கும்போதெல்லாம்
உன் "ஆமாம்" தலையாட்டல் தாலாட்டு

தாய் மதத்திற்கு திரும்பும் நாடக இயக்குனர்கள் ...
அறிய வாய்ப்பில்லை காதல் மதம் கடந்தது என்பதை !

- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ? " தொகுப்பிலிருந்து )

தாகம் செங்குட்டுவன்

தீபா வலி ....!
------------
- தாகம் செங்குட்டுவன்

ஊரெங்கும் கேட்கிறது
வெடிச்சத்தம் ...
நான் உள்ளுக்குள்ளே
வெடிக்கிறேன் சத்தமின்றி

ஆடையின்றி நிற்கிறேன் ...
நாளை என் மகளுக்கு வேண்டுமே புத்தாடை

கற்பனை நரகாசுரன் வதம்
தீபாவளி கதை....
நிதம் வதம் செய்யப்படுகிறேன்-
வரிசையில் நிற்கிறார்கள் திருமால்கள்

குற்றம் நிரூபிக்கப்பட்டால்
தானாகவே போகிறதாம் பதவி...
திருந்தி வாழ நினைத்தாலும்
வட்டமிடுகிறதே  விபச்சாரிப் பட்டம்

என்னை விட்டு விடுங்கள்
வயதாகிறது என்றழுதேன்...
அறுபது வயது வாடிக்கையாளருக்கு
நான்தான் வேண்டுமாம்

எத்தனைக் காதல்   எத்தனை 
திருமணம் ?
அத்தனையும் முதலிரவோடு முடிந்தன

கவலையில்லை உழைக்கிறேன் ....
என் மகளுக்காக தாய்க்காக தங்கைக்காக

தந்தை வழிச் சமூகம் முகம் புதைத்து
என்னுள் எதையோ தேட ....
விட்டத்தைப் பார்த்தே எக்காளமாய்
சிரிக்கிறேன்-
நான் தாய் வழிச்சமூகம்!!!

Saturday, November 3, 2018

தாகம் செங்குட்டுவன்

உற்றுப்பார்
இருட்டிலும்
நிழலாக நானிருப்பேன்

உடுத்திப்பார்
அந்தச்சேலையை
நூலாக எனை நெய்திருப்பேன்

பாடிப்பார்
பிடித்தப்பாடலை
'ஓராயிரம் பார்வையிலே'

ஆடிப்பார்
படித்த பரதத்தை
வழிந்திடுவேன் உன் வியர்வையிலே

கிள்ளிப்பார்
நீயே உனை
வலியால் நானன்றோ துடித்திடுவேன்

அள்ளிப்பார்
நீரினை
கைகளில் நான்தானே தவழ்ந்திருப்பேன்

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ " தொகுப்பிலிருந்து ...)

Thursday, November 1, 2018

ஆன்மன்

ஒற்றுமைக்கு உலை வைத்துவிட்டு ஒற்றுமைக்கான சிலையா?!

நேற்று 31.10.2018 இந்தியத் துணைக்கண்டத்தில் ஒற்றுமைக்கான சிலை திறந்துவைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் இந்த நிலத்தில் சமஸ்தானங்களாக இயங்கிய 565 சிற்றரசுகளை பேச்சுவார்த்தை நடத்தியும், மிரட்டியும், ராணுவத்தின் துணையோடும் ஒன்று சேர்த்தார் சுதந்திர இந்தியாவின் துணைப்பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த திரு.வல்லபாய் பட்டேல் நேற்று அவர் பிறந்த தினத்தில் அவர் பிறந்த குஜராத்தில் திறந்துவைக்கப்பட்ட சிலைதான் ஒற்றுமைக்கான சிலை என்கிறது இந்த அரசு.

இன்று 01.11.2018 என்ன நாள் தெரியுமா மொழி வாரியாக மாநிலங்கள் முதற்கட்டமாக பிரிக்கப்பட்ட நாள். இந்தியத் துணைக்கண்டம் 14 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்கள் என்று 20 துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாள். இன்று இந்தியா 36 துண்டுகளாகிவிட்டது. இன்னும் மாநிலம் பிரித்துக் கேட்கும் போராட்டங்கள் ஓயவில்லை. கடைசியாக, முதலில் பிறந்த ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிந்தது.

சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களைத் தனியாகப் பிரித்து மாநிலமாக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து அதை வலியுறுத்தி திரு.ஶ்ரீராமுலு என்பவர் 58 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்து அதன்பின் நடந்த கலவரங்களின் முடிவில் 1953 ல் ஆந்திர மாநிலம் உருவானது. அதன் பின் மாநில சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, மாநில சீரமைப்புச் சட்டம் இயற்றி 1956 நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அமைந்தது.

மனிதனின் சுதந்திர தாகம் தன்னை கடுமையாக கட்டுப்படுத்துகிற அமைப்பிலிருந்து விடுவித்துக்கொள்ளவே தூண்டும். அப்படித்தான் மிகப்பெரும் நிலமாக இருந்த “ஆங்கிலேய இந்தியா” பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், பர்மா, இந்தியா என்று பிரிந்துபோனது. அப்படிப்பிரிந்த இந்தியா தன்னுள் பல மொழி பேசும் மக்களையும், பல கலாச்சாரங்களை உடைய மக்களையும், பல இனக்குழுக்களையும் கொண்டிருந்தது. அதனால் 1947 ல் சுதந்திரம் பெற்று அடுத்த அய்ந்து ஆண்டுகளிலேயே தன்னாட்சி மன்னர்களிடமிருந்து ஒரு நிலமாக்கப்பட்டு இந்தப் பெருநிலம் மொழிவாரி பிரிந்து நின்றது.

பண்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டை ஒற்றைத் தன்மையானதாக ஆக்கமுடியாது என்பதற்கான முதல் பாடம் ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கிருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அகண்ட பாரதம் என்கின்றனர் இந்தியா இந்து நாடு என்கின்றனர் ஒரே நாடு ஒரே வரி என்கின்றனர். எல்லாம் சரி யாரும் ஒரு நாடு துண்டுதுண்டாகப் போவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் அந்த மக்களை எந்த அடிப்படையில், எந்தப்புள்ளியில் ஒன்றிணைத்து வைக்கவேண்டும் என்கிற மதி ஆட்சியாளர்களுக்கு வேண்டுமல்லவா? அண்ணல் அம்மபேதகர் சைமன் கமிசனிடம் அளித்த அறிக்கையில் ராஜ்தானியில் இருந்து கர்நாடகம் பிரிவதை எதிர்க்கிறார் அதில் அவர் ஒரு மொழி ஒரு மாகாணம் என்பது நடைமுறைப்படுத்த முடியாத மிகப்பெரிய கோட்பாடு என்கிறார். ஆக பிரிவினைக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை.

பேரறிஞர் அண்ணா மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாச்சியை வலியுறுத்தினார். ஏனென்றால் மாநில உரிமைகள் வலுவானதாகவும் பிறர் தலையீடு இல்லாமலும் சுதந்திரமாக இயங்கவேண்டுமென அவர் நினைத்தார்.

இரண்டு விடயங்களை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஒன்று நாட்டின் பண்முகத்தன்மை, மற்றொன்று மாநிலங்களின் உரிமை. இந்த இரண்டிற்கும் ஒரே நேரத்தில் குழிபறிக்கிறது இந்த பாசிச பாஜக அரசு. மாநிலங்களின் முக்கிய நிதி ஆதாரமான வரி வருவாயை ஒரே நாடு ஒரே வரி என்கிற முழக்கத்தோடு ஜி.எஸ்.டி என்கிற பெயரில் மத்திக்கு மடை மாற்றம் செய்துவிட்டது இந்த அரசு. நீட் என்கிற பெயரில் மாநில கல்வி உரிமையை சிதைத்து வைத்திருக்கிறது இந்த அரசு. மக்கள் பிரதிநிதியாக இல்லாத சாமியார்களை முதல்வராக்கி மாநிலங்களின் மீது காவிச்சாயம் பூசுகிறது இந்த அரசு. இன்றும் வேறு மாநில மக்களை தங்கள் மாநிலங்களிலிருந்து திடீர் கலவரங்கள் மூலம் வெளியேற்றுவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. பிறகு எப்படி இது ஒற்றுமையான நாடாகும்.

நீதித்துறையை புலனாய்வுத்துறை வழியாக வருமானவரித்துறையின் கரம் கொண்டு தனக்குச் சாதகமாக்கி வைத்திருக்கிறது இந்த அரசு. மாநிலங்களின் உரிமையைப் பரிப்பதற்கான திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறது. அதே நேரத்தில் சிறுபான்மை இன மக்களை அச்சத்திற்குள்ளாக்குவதற்காக அரசியல் கொலைகளையும் கைதுகளையும் அரங்கேற்றுகிறது. இப்படி ஒற்றைத் தன்மைக்கு நிர்வாகத்தையும், கலாச்சாரத்தையும் நகர்த்த நகர்த்த மக்கள் அச்சத்தின் பிடியிலும், களச் செயல்பாட்டாளர்கள் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் பிடியிலும் நிற்கின்றனர்.

இந்த அழுத்தம் தொடர்ந்தால் அது வெடித்து, மக்களை பிரிவினை நோக்கி நகர்த்தும் இந்திய ஒன்றியத்தின் மாநிலங்கள் தனித்தனி நாடாகவேண்டும் என்கிற சுதந்திர தாகம் அந்தந்த மாநில மக்களிடையே உருவாகும் முடிவில் ஒரு கொந்தளிப்பான நிலைக்கு இந்தியத் துணைக்கண்டம் தள்ளப்படும். பிரிவினையை ஒருபோதும் ஆதரிக்காத மக்கள்கூட தங்களின் மாநில உரிமைகள் முழுவதும் பறிக்கப்பட்ட கையறு நிலையில் அதை ஆதரித்து விடும் அபாயம் இருக்கிறது.

ஒரே நாடு ஒரே மக்கள் என்பதை அடைய ஓயாமல் ஒரு அரசு சிந்தித்து, தனது பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலையுயர்வு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி வரிக்குப்பிறகான தொழில் இழப்பு, வேலை வாய்ப்பிழப்பு, மீண்டும் தலைதூக்கும் வறுமை. இவற்றையெல்லாம் சிந்திக்காமல் சில முதலாளிகளுக்கு திட்டங்களைப் பெற்றுத்தருவது, வளங்களைப் பங்கிட்டுத் தருவது, கடன் தருவது, பெருங்கடன் பெற்று நாட்டைவிட்டு ஓடிப்போனவர்களை நீதியின் முன் நிறுத்தாமல் விட்டுவைத்திருப்பது எல்லாச் சுமையையும் வெகுமக்கள் மீது சுமத்துவது என்று இந்த அரசின் செயல்பாடு மூச்சடைக்க வைக்கிறது. மூச்சடைத்துக்கிடப்பதில் தான் இந்த நாடு ஒன்றாக இருக்கிறது.

ஒரு குடும்பத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள்கூட ஒரே கொள்கையையும் ஒரே நடத்தையையும் கொண்டிருப்பதில்லை. இது இயல்பு என்பதாக கிராமங்களில் சொல்வார்கள் “அஞ்சு வெரலும் ஒன்னுபோலவா இருக்கு” என்று.

ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கும் உலகில் 130 கோடி மக்களை ஒற்றைக் கலாச்சாரத்திற்கு அடியில் காவிச்சாயம் பூசி நிறுத்தமுடியுமா? அனைவரும் ஒன்றாக இயங்க அவரவர் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டுமல்லவா ? 

ஊருக்கு ஊர் இந்துத்துவ அமைப்புகளை உண்டாக்கி அந்தப்பகுதி சிறுபான்மை மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் விளிம்புநிலை மக்களை எல்லாம் பிரித்துப்பேசி மோதல் உண்டாக்கி, முற்போக்காக பேசுபவர்கள் எழுதுபவர்களைக் கொலை செய்து, சகிப்புத்தன்மையே இல்லாமல் ஒற்றுமையைக் குலைத்துக்கொண்டிருக்கும் நீங்கள் எப்படி ஒரு தேசத்தை ஒற்றுமையாக வைப்பீர்கள்.

எல்லா மக்களையும் சுதந்திரமாக வைப்பதிலும், மாநில நிர்வாகங்களை சுதந்திரமாக வைப்பதிலும், பண்முகத்தன்மையை சுதந்திரமாக வைப்பதிலும், சிறுபான்மை மக்களை அச்சமின்றி சுதந்திரமாக வைப்பதிலும், எப்போது மத்திய அரசு நிறைவாக செயல்பட்டு மக்களின் நம்பிக்கையைப் பெருகிறதோ அப்போது எந்த பகீரதபிரயத்தனங்களும் இல்லாமல் இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாக இருக்கும். இவற்றையெல்லாம் யார் செய்து முடிக்கிறார்களோ அன்று அவரை ஒற்றுமைக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ளலாம்.

அதுவரை பாசிச பாஜக ஒழிக!

ஆன்மன்
01.11.2018

தாகம் செங்குட்டுவன்

இலங்கையில் தமிழர்கள் அல்லல்படுவதுப்போல் ....

தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதுப்போல்....

மத்திய அரசு தமிழ் நாட்டை வஞ்சிப்பதுப்போல் .....

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதைப்போல்.....

காஷ்மீர் மக்கள் அமைதிக்காக காத்திருப்பதுப் போல்....

அரை மணி நேர மழைக்கே சென்னை மிதப்பதுப்போல்....

ரஜினி கட்சி ஆரமிப்பதாக அறிவித்ததுப்போல் .....

மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதுப்போல் .....

தமிழ்த்திரை உலகில் கதைத் திருட்டு நடைப்பெறுவதுப்போல்....

சென்னையைத் தாக்க வந்தப்புயல் ஆந்திரா நோக்கித் திரும்பியதுப்போல்...

எச் ராஜா அவதூறாகப் பேசுவதுப்போல்....

எஸ்.வி.சேகரை காவல்துறைத் தேடுவதுப்போல் ....

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது !!

- தாகம் செங்குட்டுவன்

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...